பெங்களூரு,
மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, நடிகை சுமலதா சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இவர்கள் இருவரிடையே பலமான போட்டி ஏற்பட்டுள்ளது.
சுமலதாவை ஆதரித்து நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் சொகுசு எருதுகளை போன்றவர்கள். அந்த எருதுகள் வெயிலுக்கு வெளியே வராது என்று கூறி இருந்தார்.
இதற்கு நடிகர் யஷ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எங்களுக்கு வெயில் ஒன்றும் புதிது அல்ல. எனது தந்தை ஒரு டிரைவர், நான் டிரைவரின் மகன். அதனால் நாங்கள் வெயிலை பார்த்து பயப்படவில்லை. வெயிலில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தவன் நான். அரசு பஸ்சில் பயணம் செய்து வந்தவர்கள். ஆனால் பிறந்தது முதல் நிழலிலேயே இருந்தவர்கள் யார்?. இவ்வாறு வளர்ந்தவர்கள் தான் வெயில் பற்றி யோசிக்க வேண்டும்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்களை நேரடியாக சந்திப்பதால், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.