கள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு


கள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு
x

கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுவையில் நாளை மறுநாள் நடக்கிறது.

புதுச்சேரி

புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள மேற்பார்வையாளர்

புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் 27 கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் புதுவை போக்குவரத்து துறையில் 30 அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடக்கிறது.

கள மேற்பார்வையாளர் பதவிக்கு 2,773 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்காக 7 மையங்களும், அமலாக்க உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த 578 பேருக்கு 2 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அவர்களது நுழைவு சீட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொமிட்டு எடுத்து வரவேண்டும்.

ஹால் டிக்கெட்

மேலும் விண்ணப்பதாரர்கள் நுழைவுசீட்டுடன் (ஹால் டிக்கெட்) ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், பான்கார்டு இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

கள மேற்பார்வையாளர் தேர்வுக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 10 மணிக்கு மூடப்படும். அதேபோல் அமலாக்க உதவியாளர் தேர்வுக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் மதியம் 2.30 மணிக்கு மூடப்படும்.

அதன்பின்பு தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதி கிடையாது. எனவே தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வந்து சேர வேண்டும். தேர்வர்கள் கருப்பு வண்ண பால்பாய்ண்ட் பேனா, ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்துக்கு கொண்டு வரவேண்டும். செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டுவருவது தடை செய்யப்பட்டு உள்ளது.

இணையதளம்

இதுவரை ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு மையத்தின் இருப்பிடத்தை முன்னரே அறிந்துகொண்டு தேர்வு மையத்துக்கு சரியான நேரத்தில் சென்றடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதுதொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story