ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் டாக்டர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 214 பேருக்கு தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டாக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 24 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 பெண்கள் உள்பட மொத்தம் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகஅளவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதிநகரை சேர்ந்த 74 வயது டாக்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த காளையார் கோவிலை சேர்ந்த 47 வயது நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com