தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் தூள்செட்டிஏரி, ராஜபாளையம் புதிய ஏரி மற்றும் பிக்கனஅள்ளி ஏரி ஆகிய 3 ஏரிகளில் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகள் ரூ.1.59 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்ட பணிகளுக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 2020-2021-ம் ஆண்டில் 11 ஏரிகளில் தூர்வார ரூ.8 கோடியே 11 லட்சத்து 84 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019-2020-ம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள 458 ஏரிகள், குட்டைகள், ரூ.16 கோடியே 46 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளன.
இதுபோன்ற திட்டங்களால் ஏரிகளில் மழைநீரை அதிக அளவில் தேக்கி வைப்பதுடன், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.