ஆக்கிரமிப்பை அகற்றிய பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல்

ஆக்கிரமிப்பை அகற்றிய பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Published on

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. அவருடைய மனைவி பெருமாயி (வயது 50). இவர், அதே பகுதியில் தெருவை மறித்து குடிசை அமைத்திருந்தார். இது தொடர்பாக வந்த புகாரின் பேரில், கடந்த நவம்பர் மாதம் அந்த குடிசையை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் மீண்டும் பெருமாயி குடிசை அமைத்திருந்தார். அதனை அகற்றுவதற்காக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கயல்விழி, கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை அங்கு சென்றனர்.

அப்போது அவர்களை ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் பெருமாயி தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். இருப்பினும் போலீசார் உதவியுடன் பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றினர். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து பெருமாயி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாயியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com