குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தொட்டியம் அருகே அரசலூரில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

தொட்டியம்,

தொட்டியம் அருகே அரசலூரில் உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டிடம் அருகே தோளூர்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் உள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விடும்போது, குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகிறது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அரசலூர் பகுதி பொதுமக்கள் நேற்று காலை அரசலூர்-திருநாராயணபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் உடைந்த குடிநீர் குழாயை விரைவில் சரி செய்து தரப்படும். சுகதார துறை மூலம் கொசுமருந்து மற்றும் குளோரின் தெளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசலூர்-திருநாராயணபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com