மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடும் நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வசதியாக பார்வையாளர் நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

புராதன சின்னங்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கபட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமாக வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.

கொரோனா குறைந்து வந்ததன் எதிரொலியாக கடந்த ஜூன் 28-ந் தேதி முதல் புராதன சின்னங்களை பார்வையிடஅனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிகின்றனர். அவர்கள் அதிகாலை 7 மணியளவில் அங்கு திரண்டு விடுவதால் புராதன சின்னங்களை காத்திருந்து கண்டுகளிக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் நேரம் திறக்க கோரிக்கை

அதேபோல் மதியம் 3 மணியளவில் வருகை தரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டுகளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com