மலைக்கோவிலூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மலைக்கோவிலூரிலிருந்து மூலப்பட்டி, வடுகநாகம்பள்ளி செல்லும் தார்சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தார்சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய பள்ளம்போல் காட்சியளிக்கிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் இந்த சாலைகள் வழியாகச்செல்வோர் அடிக்கடி கால் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இரவு நேரங்களில் செல்வோர் தினம்,தினம் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் மழைகாலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் சிலர் விழுந்து காயமும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சரிசெய்து புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com