ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
Published on

புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 89 கோடி ரூபாய் பண பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், பண பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க கோரியும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 11-ந் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு, போலீஸ் டி.ஜி.பி., அபிராமபுரம் காவல் நிலையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், மருது கணேஷ் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும், சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com