சாலை வசதி செய்து தர எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தல்

சாலை வசதி செய்து தர எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள கட்டவிளாகம் ஊராட்சியில் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது பொதுமக்கள் சார்பில் கட்டவிளாகம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருந்து வருவதால், பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்குவதற்கு தனியாக ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதற்கு, ஏற்கனவே ஆழ்குழாய் அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உடனடியாக கட்டவிளாகம் ஊராட்சியில் புதிய ஆழ் குழாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யூனியன் தலைவர் முகமது முக்தார் தெரிவித்தார்.

அதன்பின்னர் கட்டவிளாகம் கீழ குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் வயல் காட்டு பகுதியில் நடந்து சென்று வரவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே புதிதாக சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவர் ஆகியோர் உடனடியாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து மங்கலக்குடி, அரசத்தூர் ஊராட்சிகளில் யூனியன் தலைவர் முகமது முக்தார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் பாசானி, கெங்கை விலாசம் போன்ற கிராமங்களுக்கு சாலை மேம்பாட்டு பணியை மேற்கொள்ள வேண்டும், புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும், அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் அரசத்தூர் ஊராட்சி சார்பில் நடைபெற்று வரும் அம்மா விளையாட்டு மைதானத்தை யூனியன் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய கவுன்சிலர்கள் கூகுடி கார்த்திகேயன் ராஜா, மங்கலக்குடி ஜமால் மைதீன், ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம், ஒன்றிய பொறியாளர் ராமசாமி மற்றும் யூனியன் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com