

மங்கலம்,
இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 8-ந்தேதி மங்கலம் நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பூமலூர், 63 வேலம்பாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், மங்கலம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணிக்கு முடிவடைந்தது.
கூட்டம் முடிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இந்து மக்கள் கூட்டமைப்பினரிடம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் வழியாக செல்ல வேண்டாம் என்றும், போலீசார் ஏற்படுத்தி கொடுத்த வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு கூறினர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுக்கூட்டம் முடிந்து பெரும்பாலானோர் போலீசார் கூறிய வழியில் கலைந்து சென்றனர்.
ஆனால் ஒருசிலர் மங்கலம்-திருப்பூர் ரோட்டில் உள்ள குளத்துபுதூர், நீலிபிரிவு, பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் போலீசார் ஏற்படுத்தி கொடுத்த வழியில் செல்ல மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்து மக்கள் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் முஸ்லிம் அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரிடமும் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் 22 பேர் மீதும், இந்து மக்கள் கூட்டமைப்பினர 13 பேர் மீதும் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.