

புதுடெல்லி,
மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி உறுப்பினரான பிரக்யா தாகூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். போபால் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திக் விஜய்சிங்கை எதிர்த்து போட்டியிட்ட பிரக்யா தாகூர் சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரக்யா தாகூர், பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தக்குழுவில் 21 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். 2008 -ஆம் ஆண்டு மலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யா தாகூர், தற்போது ஜாமீனில் உள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரக்யாசிங் தாகூருக்கு பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் இடம் அளித்திருப்பது, நமது பாதுகாப்பு படையை இழிவுபடுத்துவது போன்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆலோசனைக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.