ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம்

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
Published on

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது.

308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 605 பதவிகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது. இவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கிடுவது தொடர்பாக பாமக, பாஜக, தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளு டன் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் 27 மாவட்டங் களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக அதிமுகவுடன் பேச்சு நடத்த மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளருடன் பேசி பாஜக போட்டியிடுவதற்கான வார்டுகளை முடிவு செய்வார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான இடங்களைப் பெற மாவட்ட அளவில் பேசி வருகின்றன.

அதிமுக கூட்டணியில் சதவீத அடிப்படையில் இடங்கள் கிடையாது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஊரக உள்ளட்சி அமைப்புகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்ய அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இடங்களை பிரித்து கொள்ளலாம். இடம் பிரிப்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளுமாறு அதிமுக அறிவுறுத்தி உள்ளது.

திமுக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு என்பது மாவட்ட அளவில் தீர்மானிக்கப்படும் என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி மாவட்ட அளவில் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com