ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு - சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
Published on

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி (பல்லாவரம்), தி.மு.க. ஆட்சியின்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்து கூறியதாவது:-

உறுப்பினர் அவைக்கு தவறான தகவலை தருகிறார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதோடு சரி. அதை அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. ஆனால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெற்றவர்கள் ஊதியம் பெறுவதற்கான சட்டத்தை தான் நீங்கள் போட்டீர்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

அதை நடைமுறைப்படுத்தியது ஜெயலலிதா அரசு தான். ரேஷன் கடை ஊழியருக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்தீர்கள். அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com