துபாய்
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு தடை மற்றும் கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறி உள்ளது.
சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மெக்கா நகருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள் புனித பயணம் மேற்கொண்டால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே. வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதேநேரம் சவுதிஅரேபியாவில்வசித்து வரும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கோள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உலகளவில் தொடர்ந்து வளர்ந்து வருவதால், நெரிசலான இடங்களிலும் பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவுவதால், ஹஜ் "இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகளுடன் நடைபெறும்" என்று அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மட்டுமே வசிப்பவர்கள், ஹஜ் செய்ய தயாராக உள்ளனர். "
"முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கபட்டு உள்ளது. நமது உடல்நலம் பாதுகாக்கும் வகையில் இஸ்லாத்தின் போதனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும்போது ஹஜ் பாதுகாப்பாக செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் செய்தனர், அவர்களில் 18 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.