கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published on

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,499 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில் நேற்று முன்தினம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நடந்த இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். மொத்தம் 73.64 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி போன்ற அருகில் உள்ள தொகுதிகளில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் விரைவாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேன்களில் எடுத்து வரப்பட்டன. நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகள் தொலைவில் இருப்பதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

முதல் எந்திரம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கும், கடைசி எந்திரம் திட்டக்குடி பகுதியில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கும் வந்தது. பின்னர் கடலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் கல்லூரியின் இடது புறம் உள்ள கட்டிடத்திலும், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் மைய பகுதியில் உள்ள கட்டிடத்தின் 3 தளங்களிலும், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரி வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்திலும் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அந்த அறைகளுக்கு தனித்தனியாக கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில், பொது பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீல் மேற்பார்வையில் அரசியல் கட்சிகளின் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர் இது பற்றி கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பெரியார் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது முதல் அடுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் துப்பாக்கி ஏந்தியபடியும், 3-வது அடுக்கில் உள்ளூர் போலீஸ்காரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சுழற்சி முறையில் 135 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே, வெளியே, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார். இந்த சீல், அடுத்த மாதம்(மே) 23-ந் தேதி வேட்பாளர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com