நாடாளுமன்ற, சட்டசபைகளில் தனித்தொகுதிகள் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

நாடாளுமன்ற, சட்டசபைகளில் எஸ்.சி., எஸ்.டி., தனித்தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற, சட்டசபைகளில் எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தனித்தொகுதிகள் உருவாக்கி அவை நடைமுறையில் இருந்து வருகின்றன.

இது வரும் ஜனவரி மாதம் 25-ந் தேதி முடிகிறது.

இந்தநிலையில், தனித்தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகள் அதாவது, 2030-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி வரை நீட்டிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும்.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

* தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தனிப்பட்ட தரவுகளை கையாள்வது தொடர்பான கட்டமைப்பை கொண்டுள்ளது.

* வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடிமக்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

* காஷ்மீரில் பொருளாதாரத்தில் நலிவு அடைந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை திரும்பப்பெற மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

* சமூக, பொதுத்துறை ஒன்றியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக பாரத பத்திர பரிமாற்ற வர்த்தக நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

* பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல திருத்த மசோதாவுக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் கொடுத்தது.

* டெல்லி ராஷ்ட்ரிய சமஸ்கிருத சமஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திர சமஸ்கிருத வித்யா பீடம், திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவற்றை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

* டெல்லி பிரகதி மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்காக ரூ.611 கோடிக்கு இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும், இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு குத்தகைக்கு விட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com