கொரோனா துயரத்தில் மூழ்கிய மக்களுக்கு ‘ஷாக்’ மின் கட்டணம் என்ற பாறாங்கல்லை தலையில் தூக்கி வைப்பதா? தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மின் கட்டணம் என்ற பாறாங்கல்லை தலையில் தூக்கி வைப்பதா? என்று தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

4 மாத மின் நுகர்வு இரு 2 மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு மின் கட்டணத்தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து கொந்தளிப்பது, அ.தி.மு.க. அரசின் காதுகளில் விழாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதை அப்படியே நம்பிய அப்பாவி பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகி, அதுவும் அ.தி.மு.க. அரசின் 110 அறிவிப்புகள் போல் மாறி கொரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு, ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் பிரசன்னா இதுகுறித்து கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதில் அளிப்பதற்கு பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அரசியல் ரீதியான அறிக்கையை ஒரு விளக்கமாக கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுவோரை திருப்திப்படுத்துவதற்காக, அதிகாரிகளும் எந்த அளவிற்கு அரசியல்மயமாகிவிட்டார்கள் என்ற அவலத்தை எடுத்துரைக்கிறது.

4 மாத மின் நுகர்வை இரு 2 மாத மின் நுகர்வாக பிரிக்காமல், கட்டணம் வசூலிப்பதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது நன்கு தெரிந்திருந்தும், தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்பது போல், மின் பகிர்மானக்கழகம் விந்தையான விளக்கமளிப்பதும், அதை தமிழக அரசு ஆமோதித்து கொரோனா காலத்தில் மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும்.

மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதில், ஊரடங்கில் வருமானத்தை இழந்து, வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் அவர்களுக்கு, வீட்டுக்கு பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லை தலையில் தூக்கிவைத்து, அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் தமிழக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை 2 மாத நுகர்வாகப் பிரிப்பது, வீதப் பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும்.

பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளையும் கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை தமிழக அரசு உறுதி செய்திடவேண்டும்.

விவசாயிகளும் எல்லா வகையிலும் சொல்லொணாத துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே வேலைவாய்ப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கும் மிக முக்கிய பங்காற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், முன் மாத மின் கட்டணத்தை வசூலிக்காமல் முந்தைய மாதம் செலுத்திய மின் கட்டணத்தையோ அல்லது மின் நுகர்வோர் எடுத்துக்கொடுத்த ரீடிங்கிற்கான கட்டணத்தையோ, பேரிடர் நிவாரணமாக அறிவித்திட வேண்டும். மேலும் 6 மாதங்களுக்காவது கொரோனா கால மின் கட்டண சலுகைகளை வழங்கி, தமிழகத்தில் வேளாண்மையும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com