சாமிதோப்பில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணை அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

சாமிதோப்பில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணையை அதிகாரிகள் அகற்றினர்.
Published on

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட இறால் பண்ணைகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலக அதிகாரிகள் மீன்பண்ணைகள் குறித்த விவரங்களை சேகரிக்க தொடங்கினர். அப்போது, சாமிதோப்பு ரெயில்வே கேட் அருகில் அனுமதியின்றி இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தென்தாமரைகுளம் போலீசார் அந்த இறால் பண்ணையை ஆய்வு செய்து அதை அகற்றப்போவதாக கூறினர்.

அகற்றம்

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலக ஆய்வாளர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னா, வடக்கு தாமரைகுளம் கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல், தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், மீனாகுமாரி, ஜாண் கென்னடி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் இறால் பண்ணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com