கடந்த 6 நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.03 லட்சம் கோடி வருவாய்

கடந்த 6 நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா நிறுவனம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.03 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 6 நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.03 லட்சம் கோடி வருவாய்
Published on

நிலக்கரி உற்பத்தி

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 61 கோடி டன்னாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் அது 60.7 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தியில் 7 சதவீத வளர்ச்சி இருந்தது.

இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.3,523 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.3,085 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோல் இந்தியா மூலம், 2018-19 வரையிலான 6 நிதி ஆண்டுகளில் ரூ.2.03 லட்சம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2013-14-ல் ரூ.19,714 கோடியும், 2014-15-ல் ரூ.21,482 கோடியும் ஈட்டப்பட்டது. இந்நிறுவனம், அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் முறையே ரூ.29,084 கோடி, ரூ.44,068 கோடி மற்றும் ரூ.44,047 கோடி வருவாய் அளித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) அதிகபட்சமாக ரூ.44,826 கோடி வழங்கி இருக்கிறது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.202.70-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.203.05-க்கும் குறைந்தபட்சமாக ரூ.195.80-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.196.45 -ல் நிலைகொண்டது. புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.08 சதவீத இறக்கமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com