

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை வீணடிப்பதும்கூட. காடுகளில் உள்ள மரங்கள், குறைந்த மழைபொழிவுக் காலத்திலும்கூட பச்சைப் பசேலென இருப்பதற்கான காரணத்தை பற்றி யோசித்திருக்கிறோமா? இதற்கு, அவை நுகரும் இயற்கை உரங்களே அடிப்படை காரணம். மரங்களிலிருந்து விழும் இலைகள், சருகுகள், இதர மரச்சிதைவுகள் மக்கி பலன் தரும் உரமாக மாறுகின்றன.
இதை நாமும் பின்பற்றலாம். வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் உதிர்ந்த இலைகள், சருகுகளை ஓரிடத்தில் சேகரித்து இயற்கை உரமாக்கலாம். இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 60.3 சதவீதத்தில் விவசாயம் செய்தாலும், விவசாய உற்பத்தி ஒரு எக்டருக்கு 2,962 டன் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், தனது 12.6 சதவீத நிலப்பரப்பில் மட்டும் விவசாயம் செய்யும் ஜப்பானில் 6,105 டன் விவசாய உற்பத்தி கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசாயன உரமோ, நவீன தொழில்நுட்பமோ அல்ல. இயற்கையான மட்கு உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே.
இயற்கை முறையில் அங்கக பொருட்களை, நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மட்க செய்தால் கிடைப்பதே மட்கு உரம். இவற்றில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை சேர்ந்துள்ளன. தாவரக் கழிவுகளுக்கு ஏற்ப இவற்றின் விகிதாச்சாரம் மாறுமே ஒழிய, அனைத்துக் கழிவிலும் இந்த மூன்று சத்துகளும் உள்ளன. இச்சத்துகள் மண் வளத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீடித்த வேளாண்மைக்கும் உதவுகின்றன. மட்கு உரங்கள் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கையான வேதிப்பண்புகளை மேம்படுத்துகின்றன. இந்த மேம்பாட்டின் விளைவாக வறட்சி நோய், நச்சுத்தன்மைகளை தாங்கும் விதத்தில் மண் மாறுகிறது. இதனால் பயிர்களிலும் மரங்களிலும் அதிக மகசூல் கிடைக்கும்.
மரங்கள் அமைந்திருக்கும் வளாகத்தின் ஒரு மூலையில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லது விழும் இலைகளின் அளவுக்கேற்ப குழிகளை வெட்டி அவற்றில் உலர்ந்த இலைகளை போட்டு வைத்தாலே போதும். பசுஞ்சாணம், இதர கழிவு கிடைத்தால் அக்குழிகளில் சேர்க்கலாம். கிடைக்காதபட்சத்தில், உரக்கடைகளில் கிடைக்கும் நுண்ணுயிரிக் கூட்டுக்கலவையை தண்ணீரில் கலந்து, அக்குழிகளில் பரவலாக ஊற்றலாம். இரண்டும் முடியாத நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை நீர் தெளித்தாலே போதும். குழிகளில் உள்ள இலைகளைக் கிளறி விட வேண்டும். இப்படி நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு செய்த பிறகு, மக்கிய உரம் கிடைக்கும். அழகு புல்வெளிகள் அமைப்பதற்கு முன் இந்த மட்கும் உரக்கலவையை பரப்பி, அதன் மீது மண்ணை பரப்பி புற்களை நடலாம்.
இப்படி எதுவுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பெருக்கிச் சேர்த்த இலைகளை மூடைகளாக கட்டி அருகிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தாலே, அவற்றை அவர்கள் நிலத்தில் இட்டு மண்வளத்தை மேம்படுத்தி கொள்ளலாம். இலைகளை எரிப்பதை தடுப்பதன் மூலம் உரம் கிடைப்பது மட்டுமல்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக புவி வெப்பமயமாதலையும் சிறிதளவாவது தணிக்கலாமே.