

புதுடெல்லி,
மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவில் இந்த அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பலர் வாழ்கின்றனர். பலரும் ஒரு பெரிய மற்றும் அழகான வீட்டில் வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், சிலர் ரோடுகளையே வீடுகளாக்கி வசிக்கும் அதே இந்தியாவில்தான், வீட்டிற்காக மட்டுமே பல்லாயிரம் கோடிகளை செலவழிப்போரும் உண்டு. அப்படி இந்தியாவில் கோடிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இந்த தொகுப்பில் காணலாம்...
இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் தங்குமிடமான ஆண்டிலியா தெற்கு மும்பையில் அமைந்துள்ளது. 27 தளங்களுடன் காணப்படும் இந்த வானளாவிய கட்டிடத்தின் மதிப்பு ரூ.6,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை இருக்கும், இது உலகளவின் இரண்டாவது மிக விலையுயர்ந்த குடியிருப்பாகும். பக்கிங்ஹாம் அரண்மனை முதலிடத்தைப் பெறுகிறது.
ஸ்பா, நீச்சல் குளங்கள், 80 இருக்கைகள் கொண்ட தியேட்டர், ஐஸ்கிரீம் பார்லர், சலூன், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள், மூன்று ஹெலிபேடுகள், வாகனம் நிறுத்தும் இடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியுள்ளது. பூகம்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள மன்னத், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இல்லமாக விளங்குகிறது. மும்பையின் பாந்த்ராவில் அமைந்துள்ள இந்த விசாலமான மாளிகையின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். 27 ஆயிரம் சதுர அடியில் இது கட்டப்பட்டுள்ளது. இதில் ஐந்து பெரிய படுக்கையறைகள், ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம், ஒரு ஆடம்பரமான நூலகம், ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமால் வசிக்கும் அழகிய இல்லமாகும். ஐந்து மாடிகளைக் கொண்ட வைர வடிவ கட்டிடம் தோராயமாக ரூ.450 கோடி மதிப்புடையதாகும். நீச்சல் குளம், பார்க்கிங் வசதி, விசாலமான சாப்பாட்டு அறைகள், கோயில் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஜாதியா ஹவுஸ் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் இல்லமாக விளங்குகிறது. 30 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த அரண்மனை, சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான உட்புறங்கள், 20 விசாலமான படுக்கையறைகள், தோட்டங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஜே.கே. ஹவுஸ், ரேமண்ட் குழுமத்தின் தலைவரான கௌதம் சிங்கானியாவின் ஆடம்பரமான தங்குமிடமாக உள்ளது. ஒரு நேர்த்தியான வகையில் அதிநவீனமாக இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு, இரண்டு நீச்சல் குளங்கள், ஐந்து பார்க்கிங் தளங்கள், ஒரு ஹெலிபேட், ஸ்பா வசதிகள், உடற்பயிற்சி கூடம், தியேட்டர் ஆகியவற்றை கொண்டதாக விளங்குகிறது.
பேர்லான், வணிக அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்குச் சொந்தமான புகழ்பெற்ற பாரம்பரிய பங்களாவாகும். வீட்டிலிருந்தே காணும் வகையில் உள்ள அழகிய கடல் காட்சிகள் மற்றும் பசுமையான தோட்டங்களால் சூழபட்டுள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாளிகையில் நீச்சல் குளம், ஊடக அறை, உடற்பயிற்சி கூடம், நூலகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான ஸ்கை மேன்ஷன் பெங்களூரில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆடம்பரமாக உள்ளது. 35 வது மாடியில் அமைந்துள்ள இந்த செழுமையான குடியிருப்பானது, பிரமிக்க வைக்கும் உட்புறங்கள், நீச்சல் குளம், நகரத்தை 360 டிகிரி காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பரமான தங்குமிடத்தின் தற்போதைய விலை சுமார் 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ஜல்சா பங்களா, மும்பையின் ஜூஹூ பகுதியில் அமைந்துள்ளது. மூன்று தலைமுறைகளின் இல்லமாக விளங்கும் இந்த இரண்டு மாடி மாளிகையில் அமிதாப் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். 1982-ம் ஆண்டு அமிதாப்பின் “சட்டே பே சத்தா” படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பியால் அமிதாப்பிற்கு ஜல்சா பரிசளிக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு ரூ.120 கோடியைத் தாண்டியுள்ளது.
16 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் அபோட், அனில் அம்பானிக்கு சொந்தமான நவீன ஆடம்பர இல்லமாகும். இந்த வீடு கிட்டத்தட்ட 70 மீட்டர் உயரம் கொண்டது. ரூ.5,000 கோடி மதிப்புடைய இந்த மாளிகையில் கோவில், பார்க்கிங் வசதி, ஹெலிபேட் ஆகியவை உள்ளது.