சாதம் முதல் பழச்சாறு வரை… ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகள்

பழச்சாறுக்கு பதிலாக முழுப் பழத்தை சாப்பிடுவது பொதுவாக சிறந்த தேர்வாகும்.
food
Image credits: AI
Published on

இனிப்பு வகைகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. இதனால் பலரும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கின்றனர்.

ஆனால், சுவையில் இனிப்பு இல்லாத சில உணவுகளும் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடும் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.குறிப்பாக அதிக மாவுச்சத்து கொண்ட மற்றும் அதிக கிளைசெமிக் குறியீடு (GI) உள்ள உணவுகள், செரிமானத்துக்குப் பிறகு குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தக்கூடும்.

சாதம்

நமது அன்றாட உணவில் முக்கிய இடம் பிடித்திருக்கும் சாதம், குறிப்பாக அதிகமாகவும் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளும்போது, ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடும்.

அதிக அளவு சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள், பருப்பு வகைகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றுடன் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகளின் அளவை அதிகரிப்பதும் பயனுள்ளதாக இருக்கலாம்.

நாண், பூரி போன்றவற்றிலும் எச்சரிக்கை

ரொட்டி வகைகளில் நாண், பூரி போன்றவை அதிக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு கொண்டதாக இருக்கக்கூடும். இவற்றை அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவது ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதேபோல், பிரெஞ்ச் பிரைஸ், உருளைக்கிழங்கு மசாலா, ஆலு மசாலா போன்ற உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகளையும் அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

பழம்... பழச்சாறு..

பழங்களில் இயற்கையான சர்க்கரை இருந்தாலும், அவற்றில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை உடலில் உறிஞ்சப்படும் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பழத்தை சாறாக மாற்றும்போது நார்ச்சத்து குறையக்கூடும்.

குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பழச்சாறுக்கு பதிலாக முழுப் பழத்தை சாப்பிடுவது பொதுவாக சிறந்த தேர்வாகும்.

தேநீருடன் சாப்பிடும் தின்பண்டங்கள்

சமோசா, பக்கோடா உள்ளிட்ட எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் சர்க்கரை சுவை கொண்டவை அல்ல. ஆனால் அவற்றில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் அதிக கலோரி, கொழுப்பு ஆகியவை உடல் நலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே தேநீர், காபியுடன் இத்தகைய தின்பண்டங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

வெல்லம், நாட்டுச்சக்கரை

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரையை பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் வெல்லம், நாட்டுச்சக்கரை ஆகியவையும் சர்க்கரையைப் போலவே கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை வழங்குகின்றன. எனவே நீரிழிவு உள்ளவர்கள் இவற்றையும் ‘இயற்கையானது’ என்ற காரணத்தால் அதிகமாக பயன்படுத்தக் கூடாது.

அளவுதான் முக்கியம்!

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் ஒரு உணவை மட்டும் குறை கூறுவதைவிட, உணவின் அளவு, நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து மற்றும் மொத்த கலோரி ஆகியவற்றைக் கவனிப்பது முக்கியம். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரையை வேகமாக உயர்த்தக்கூடிய அதிக GI உணவுகளையும் கட்டுப்படுத்துவது அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. சர்க்கரையை மட்டும் தவிர்ப்பது அல்ல; சமச்சீரான உணவுப் பழக்கமே ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு அடிப்படை.

X

Daily Thanthi
www.dailythanthi.com