

பொங்கல் பண்டிகையை ஒட்டி அதிகமாக கிடைக்கும் பனங்கிழங்கு, உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகளை கொண்ட பாரம்பரிய உணவாகும். இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பனங்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்திற்கு உதவுவதுடன் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உடல் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு துணைபுரிகின்றன.குடல் இயக்கம் சீராவதுடன், கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டுக்குள் வரும். பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தச்சோகையை விரட்டக்கூடியதும்கூட. கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகளும் இந்தக் கிழங்கில் உள்ளன. இதிலுள்ள புரதச்சத்தானது செல்களை பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும் ஹார்மோன்களின் சீரான இயக்கத்துக்கும் உதவக்கூடியது.
பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, அதன் மேல் தோல் மற்றும் நடுப்பகுதியில் உள்ள கடினமான பகுதியை அகற்றி சாப்பிடலாம். வேகவைத்த கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து மாவாக்கியும் பயன்படுத்தலாம். பனங்கிழங்கை வேக வைத்து, அதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வராது.
பனங்கிழங்கு மாவில் கஞ்சி, கூழ், தோசை அல்லது உப்புமா தயாரித்து சாப்பிடலாம். பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து காயவைத்து மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிடும் முறையும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. பனங்கிழங்கு சிவப்பு ரத்த செல்களைப் பராமரித்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. இதனால் உடல்ரத்த ஓட்டம் சீராகிறது.
பூண்டு, மிளகு, உப்பு உள்ளிட்டவற்றுடன் பனங்கிழங்கை சேர்த்து மாவாக்கியும் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது. பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட்டால் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.
பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள் உடலுக்கு வலிமை அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணைபுரிவதாக குறிப்பிடப்படுகிறது. உடல் எடை குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பாரம்பரிய உணவு முறைகளில் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பயன்படுத்தக்கூடிய பனங்கிழங்கை, பொங்கல் காலத்தில் வாங்கி முறையாக வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.