எலுமிச்சம் பழம் விலை ‘கிடுகிடு’ உயர்வு... ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது ஒரு எலுமிச்சம் பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சம் பழம் ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை.
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எலுமிச்சம் பழ சர்பத்

தமிழகம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. பசுமை நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்கூட கோடை வெயிலுக்கு இணையாக வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான மற்றும் இயற்கை பானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சம் பழ சர்பத், எலுமிச்சம் பழ போஞ்ச் போன்றவை மக்களின் விருப்பமான பானமாக இருக்கிறது. அதற்கு காரணம் மற்ற பழச்சாறுகளின் விலையைவிட சர்பத் விலை குறைவாக உள்ளது. உடலுக்கு தேவையான குளிர்ச்சி எலுமிச்சம் பழச்சாறுடன் சேர்த்து தயார் செய்யப்படும் சர்பத்தால் கிடைக்கிறது.

எலுமிச்சம் பழம் விலை உயர்வு

இவ்வாறு எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ எலுமிச்சம் பழம் கடந்த வாரம் ரூ.250 ஆக உயர்ந்தது. அதோடு நிற்காமல் கடந்த 2 நாட்களில் ரூ.30 உயர்ந்து நேற்று ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "எலுமிச்சம் பழம் புளியங்குடி மார்க்கெட்டில் இருந்து அதிகளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது அதன் வரத்து சற்று குறைந்துள்ளது. புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடும் வெயில் அடிப்பதால் விளைச்சல் குறைந்திருக்கலாம். அதே சமயம் எலுமிச்சம் பழ தேவை அதிகமாக உள்ளது. இதனால் தான் விலை ஏறுமுகமாக உள்ளது. வரும் நாட்களில் வெயில் குறைந்தால் தேவை குறைந்து விலை குறையும்" என்றனர்.

தற்போது எலுமிச்சம் பழங்கள் வடசேரி மற்றும் அப்டா மார்க்கெட்டுகளில் தான் கிடைக்கிறது. மற்ற சிறு சிறு காய்கறி கடைகளில் எலுமிச்சம் பழம் வரத்து மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com