

மும்பை
வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பங்குகளின் மதிப்பு ரூ.5.20 லட்சம் கோடி சரிந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 432 புள்ளிகள் இறங்கியது.
சர்வதேச நிலவரங்கள்
பங்கு முன்பேர வணிகத்தில் நேற்று மார்ச் மாதத்திற்கான புதுக்கணக்கு தொடங்கியது. புதுக்கணக்கு தொடங்கும் நாளில் பங்குகளில் முதலீடு அதிகரிக்கும் என்பதால் பொதுவாக சந்தைகள் ஏற்றம் காண்பது வழக்கம். ஆனால் சர்வதேச நிலவரங்கள் காரணமாக நேற்றும் பங்கு வியாபாரம் படுத்தது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்தது. மற்ற சில நாடுகளிலும் அந்த வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடைந்ததும் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் உலக அளவில் பங்கு வர்த்தகம் சுருண்டது. அதன் தாக்கம் இங்கும் உணரப்பட்டது.
உள்நாட்டைப் பொறுத்தவரை, உலக நிலவரங்களுடன், பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு வெளியாக இருந்த ஜி.டீ.பி. மற்றும் முக்கிய துறைகளின் உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் குறித்த அவநம்பிக்கையும் சந்தை வட்டாரங்களை உலுக்கியது. மேலும் அன்னிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு கடுமையாக குறைந்ததும் எதிர்மறை உணர்வுகளை அதிகரித்தது. எனவே பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை கடும் சரிவு கண் டது. எனவே பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.5.20 லட்சம் கோடி குறைந்தது.
அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 7.01 சதவீதம் சரிந்தது. அடுத்து தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டு எண் 5.61 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை மட்டும் அதிகரித்தது. அதே சமயம் டெக் மகிந்திரா (8 சதவீதம் சரிவு), டாட்டா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 29 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,448.37 புள்ளிகள் சரிவடைந்து 38,297.29 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,087.47 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,219.97 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 456 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 2,011 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 153 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.8,352 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.2,371 கோடியாக இருந்தது.
நிப்டி
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 431.55 புள்ளிகள் குறைந்து 11,201.75 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,384.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,175.05 புள்ளிகளுக்கும் சென்றது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு