

ஹராரே,
கிரிக்கெட் மைதானத்தில் தனது வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்டர்களை அச்சுறுத்திய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர், தற்போது பயணிகள் விமானத்தின் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
1981-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஜிம்பாப்வேயின் க்வேக்வே நகரில் பிறந்தவர் டிராவிஸ் பிரண்ட். தனது உயரமான உடல்வாகு மற்றும் வேகப்பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
2000-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 2001-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிஸ் பிரண்ட், 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 3 அரைசதங்கள் உட்பட 447 ரன்கள் எடுத்துள்ளார்.
அதேபோல், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 3 அரைசதங்கள் உட்பட 548 ரன்களும் எடுத்துள்ளார்.
இவ்வாறு ஜிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த டிராவிஸின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பார்த்ததை விட விரைவாகவே முடிவுக்கு வந்தது. 2004-ம் ஆண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே நடைபெற்றதாக கூறப்படும் ஒப்பந்தப் பிரச்சினை மற்றும் அரசியல் குழப்பங்களால் பல முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் டிராவிஸ் பிரண்டும் ஒருவர். இதன் காரணமாக தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அதன் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை.
கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிவுக்கு வந்தாலும் மனம் தளராத டிராவிஸ் பிரண்ட், தனது இலக்கை வானத்தை நோக்கித் திருப்பினார்.
விமானி ஆவதற்காக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார். அதன்படி விமானி ஆனார். கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை வீசிய அதே கரங்கள், தற்போது பயணிகள் விமானங்களை இயக்கி வருகின்றன.
தற்போது விமானத்தின் கேப்டனாக பணியாற்றி வரும் டிராவிஸ் பிரண்டின் இந்த வாழ்க்கை பயணம், எதிர்பாராத தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடனும் தெளிவான இலக்குடனும் செயல்பட்டால் புதிய உயரங்களை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.