வாடாமல் நீடிக்கும் வாசம்! உலகப் புகழ்பெற்ற மதுரை மல்லியின் ரகசியம்!

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற முதல் மலர் என்ற பெருமையை மதுரை மல்லி பெற்றுள்ளது.
வாடாமல் நீடிக்கும் வாசம்! உலகப் புகழ்பெற்ற மதுரை மல்லியின் ரகசியம்!
Published on

மதுரை மல்லி என்பது தமிழ்நாட்டின் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் உலகப் புகழ்பெற்ற மல்லிகைப் பூ ஆகும். தனித்துவமான நறுமணம் மற்றும் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் தன்மை கொண்ட இம்மலர், தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற முதல் மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மதுரை மல்லி

மதுரை என்றாலே நினைவுக்குவருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். 'மதுரை மல்லி', மதுரையில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. உலக அளவில் பிரசித்திபெற்றது. பொதுவாக, 'மல்லி' என்றால் பருத்தது, உருண்டது, தடித்தது எனப் பொருள் தரும். மதுரை மல்லியும் பருத்து, உருண்டு பார்க்க பளபளவென வெண்மையான நிறத்தில் காணப்படும். மதுரை மல்லி, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விளைகிறது.

புவிசார் குறியீடு

மதுரை மல்லிக்கான புவிசார் குறியீடு, 2010-ம் ஆண்டு மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர் விண்ணப்பித்து, 2013-ம் ஆண்டு பெற்றனர். இந்த மதுரை மல்லிக்கு மயங்காத பெண்களே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த மதுரை மல்லியை பெண்கள் தலையில் வைக்கும் போது, அதனை வாசம் செய்யும் ஆண்கள் அந்த பெண்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என்றால் அதுவும் மிகையல்ல.

இரண்டு நாட்கள் வரை வாடாது...

சந்தைகளில் மதுரை மல்லி எனச் சொல்லி விற்கப்படும் மல்லிகைப் பூக்கள் எல்லாமே, 'மதுரை மல்லி' ஆகாது. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லி மட்டுமே மதுரை மல்லிகை. மற்ற மல்லிகை ஒரு நாளில் வாடிவிடும், ஆனால் மதுரை மல்லி, இரண்டு நாட்கள் வரை வாடாமல் தாக்குப்பிடிக்கும். மதுரையில் காலையில் பறிக்கும் மல்லிகைப்பூ, இரவு சிங்கப்பூரில் சந்தைக்குச் சென்றுவிடும். அந்த அளவுக்கு மதுரை மல்லிக்கு உலக அளவில் கிராக்கி இருக்கிறது.

பல நாடுகளுக்கு ஏற்றுமதி

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கோவை உட்பட பரவலாக 80 ஆயிரம் ஏக்கர் வரை மல்லிப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மல்லிகை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் மதுரை மல்லிகைக்கு மதுரையில் மட்டுமின்றி உலகளவில் தனிச் சிறப்பு உண்டு.

விளைவிக்க முயற்சி

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மதுரை மல்லிகை குண்டு குண்டாக வெள்ளை நிறத்தில், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல் இரண்டு, மூன்று நாட்கள் கூட வைத்திருந்தாலும் வாடாமல் இருக்கும். மதுரை மல்லிப்பூ செடிகளின் இந்த சிறப்பை அறிந்த மலர் உற்பத்தியாளர்கள், மதுரையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிகைப் பூச்செடிகளை தங்கள் நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் விளைவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com