மணப்பெண்ணின் செண்டை மேள முழக்கம்

மணப்பெண் ஒருவர் செண்டை மேளம் இசைக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மணப்பெண்ணின் செண்டை மேள முழக்கம்
Published on

கேரள கலாசாரத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களுள் ஒன்று, செண்டை மேளம். அதனை சுமப்பது சிரமமானது என்பதால் ஆண்களின் இசைக்கருவியாகவே விளங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது பெண்களும் செண்டை மேளம் இசைக்கப் பழகிவிட்டார்கள்.

ஆண்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு யார் முதலில் களைப்படைவார்கள் என்று சவால் விடும் அளவிற்கு ஆர்ப்பரித்தபடி செண்டை மேளம் இசைப்பது அந்த இடத்தையே அதிரவைக்கும். அதையும் விட அசத்தலாக மணப்பெண் ஒருவர் செண்டை மேளம் இசைக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

''குருவாயூர் கோவிலில் நடைபெறும் திருமண வைபவம் இது. மணப்பெண்ணின் அப்பா செண்டை மேள கலைஞர். அதனால் மகள் செண்டை மேளத்தை இசை துள்ளலுடனும், துடிப்புடனும் இசைக்கிறார். அப்போது அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும், இசைக்கு ஏற்றபடி உடல் அசைவுகளை நகர்த்தும் விதமும் பிரமிக்க வைக்கிறது'' என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.

அந்த மணமகளின் பெயர் ஷில்பா. கேரளத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சிறுவயது முதலே வளைகுடா நாட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். தந்தை ஸ்ரீகுமார் பலியாத், அபிதாபி துறைமுகத்தில் உள்ள கப்பல் நிறுவனத்தில் இயக்குனராக பதவி வகிக்கிறார்.

கேரளா பூர்வீகம் என்பதால் பாரம்பரிய இசை கருவியான செண்டை மேளத்தை விரும்பி கற்றிருக்கிறார். அதை பார்த்து மகளும் செண்டை மேளம் இசைக்கப் பழகி தனது திருமணத்தில் அமர்க்களப்படுத்திவிட்டார். மணமகன் தேவ்நாத்தும் கேரளத்தை சேர்ந்தவர்.

குருவாயூர் அருகில் உள்ள சொவ்வளூர் கிராமம் அவரது பூர்வீகம். தற்போது அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com