பாம்புகள் தோலை உரிப்பது ஏன்? அப்போது அதனை பார்த்தால் பழிவாங்குமா?

பாம்பு தோல் உரிப்பது என்பது இத்தகைய செதில்களை புதுப்பித்துக்கொள்ளும் வழிமுறையே ஆகும்.

பாம்புகள் தோலை உரிப்பது ஏன்?
Published on

பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது அதனை பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறும் கட்டு கதைகளை கேட்கிறோம். இதில் எது உண்மை? என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது.

உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்? எதனால் தோலை உரிக்கிறது? தோலை உரிக்காவிட்டால் பாம்புகளுக்கு என்னவாகும்?

முதுகெலும்பு உள்ள உயிரினம்

முதுகெலும்பு உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் பாம்பு ஆகும். இதன் இடப்பெயர்ச்சிக்கு வயிற்றுப்புற செதில்களே உதவுகின்றன.

இந்தச் செதில்களை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் நகர்வு எளிதாகிறது. பாம்பு தோல் உரிப்பது என்பது இத்தகைய செதில்களை புதுப்பித்துக்கொள்ளும் வழிமுறையே ஆகும்.

வருடத்தில் பல முறை

பாம்பு தன் தோலை முழுமையாக உரிக்காது. மேற்புறத் தோலான 'செலோபேன்' போன்ற மேலுறை பகுதியைத்தான் உரித்து புதுப்பித்துக் கொள்கிறது. இந்த மாதிரியான செயல்கள் வருடத்தில் பல முறை நிகழலாம். உதாரணமாக மரங்கள் எவ்வாறு பழைய இலைகளை உதிர்த்து, புதிய செயல்திறன்மிக்க இலைகளை பெறுகின்றதோ அதுபோலத்தான் இந்த செயலும் நடக்கிறது.

பாம்பு தன் தலையின் முன் பகுதியை ஏதாவது கடினமான பரப்பின் மீது உரசி தேய்க்கும். இதனால் புறத்தோலின் மேலுறை பிரிந்து கிழியும். இந்த பகுதியை பெரிய கல் அல்லது செடியில் சிக்கிக்கொள்ளும்படி செய்து, பின்பு உடலை நெளித்து. தளர்த்தி மேலுறையை நீக்கி விட்டு பளபளப்பான தோற்றத்துடன் வெளியே வந்துவிடும். இந்த செயல்முறையே பாம்பு தோல் உரிப்பதாகும்.

தோல் உரிக்கும் போது பார்த்தால் பாம்பு பழிவாங்குமா?

ஒரு பாம்பு தன் உடலில் பழைய தோல் இருக்கும் போது அது அசகவுரியமாக கருதும். ஒரு மறைவான இடத்தில் இருந்துக் கொள்ளும். யாரையும் தாக்காது. அந்த நேரத்தில் அதனை தொந்தரவு செய்தால், பாம்பு தாக்க முற்படும். தோல் உரியும் போது அதன் கண்களுக்கு அருகில் தோல் சரியாக உரியாமல் போனால், அது பாம்புக்கு மேலும் சிக்கலாகிவிடும். எனவே, பாம்பு தன் தோலை உரிக்கும் போது, ஏதாவது சத்தம் கேட்டால், இயல்பாகவே பாம்பு தாக்க முயலும். இதை தான் அனைவரும் பொதுவாக கூறுவார்கள்.

பாம்பை தொட்டால் விஷமா?

பாம்பு உடலை தொடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது. அது உயிரற்ற செல்களை கொண்டது. அதில் விஷம் கிடையாது. விஷமுள்ள பாம்பு கடித்தால் தான் பிரச்சினை.

ஒரு இடத்திலிருந்து பாம்பு வெளியேறினாலும், அந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. "ஏனென்றால், பாம்பு இருந்த இடம், அதன் வாழ்விடமாகும். எனவே, அந்த இடத்தில் பாம்பு நீண்ட காலத்துக்கு இருக்க வாய்ப்புண்டு. ஒரு பாம்பை பார்த்தால், அந்த இடத்தில் புகையை மூட்டி வேறு இடத்துக்கு அதை அனுப்பிவிடலாம் என கிராமத்தில் கூறப்படும் ஒரு வாய்மொழி ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com