நாங்குநேரி,
நெல்லையை அடுத்த நாங்குநேரி டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் நாகர்கோவில் நோக்கி சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர். ஓரிடத்தில் அந்த காரை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த காட்டா கடா பகுதியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் (வயது 21), அபிஜித் (23) என்பதும், காரில் கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அரவிந்த் கிருஷ்ணன், அபிஜித் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.