சோத்துப்பாறை அணை நிரம்பி வழிந்தது

தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. இதனால் கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

பெரியகுளம்:

சோத்துப்பாறை அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 121.28 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு வினாடிக்கு 138 கனஅடி நீர்வரத்து உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணை நிரம்பி வழிந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. அணை நிரம்பியதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வராகநதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com