ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Published on

தேனி,

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூழ் காய்ச்சி வழிபாடு நடத்துவார்கள். குடியிருப்பு பகுதிகளிலும் பெண்கள் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கூழ் காய்ச்சி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், கிராமப்புற கோவில்களை மட்டும் திறந்து கொள்ள அரசு அனுமதி அளித்தது.

சிறப்பு அலங்காரம்

இந்நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், தேனி மேலப்பேட்டை பத்திரகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்குள் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று வழிபாடு நடத்தினர்.

அதுபோல், பல்வேறு கோவில்களுக்கு வெளியே நின்றபடி பக்தர்கள் வழிபாடு நடத்திச் சென்றனர். இதனால் கோவில் வளாகங்கள் களைஇழந்து காணப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com