

சுந்தரகோட்டை,
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி நகர செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக நகர அவை தலைவர் வேணுகோபால் வரவேற்றார். திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ரங்கராஜ், சேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கோசி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.