சுருக்குமடி வலையை முழுமையாக தடைசெய்யாவிட்டால் போராட்டம்; 32 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலெக்டரிடம் மனு

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை முழுமையாக தடைசெய்யாவிட்டால் போராட்டம் நடைபெறும் என 32 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் மனு கொடுத்தனர்.
சுருக்குமடி வலையை முழுமையாக தடைசெய்யாவிட்டால் போராட்டம்; 32 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலெக்டரிடம் மனு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான தடை நீடித்து வரும் நிலையில், கடந்த 11-ந் தேதி தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கடலூர் சில்வர் பீச்சில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட விசைப்படகு பாதுகாப்பு சங்க தலைவர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் சோனாங்குப்பம், சித்திரப்பேட்டை, தம்மனாம்பேட்டை, பெரியகுப்பம், பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடல்ஓடை உள்ளிட்ட 32 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தங்களுடைய உத்தரவின் பேரில் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகுகள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்ததால் கடந்த 11-ந் தேதிக்கு முன்பு வரை மாவட்டத்தில் சிறிய படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. ஆனால் 13-ந் தேதிக்கு பிறகு சிலர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் 32 கிராமங்களை சேர்ந்த சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே ஏழை, எளிய மீனவர்களை காப்பாற்றும் வகையில் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கலெக்டரை சந்தித்துவிட்டு வெளியே வந்த மீனவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, எங்கள் கிராமங்களில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகுகள் குறைந்த அளவில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவற்றை மீன்பிடிக்க பயன்படுத்தாமல் இருந்து வருகிறோம்.

இந்த நிலையில் சிலர் அரசின் தடையை மீறி அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழில்செய்து வருவதால் எங்களை போன்ற சிறிய படகுகளில் சென்று மீன்பிடி தொழில்செய்து வரும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com