ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி
காபூல்,
ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தல் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு மாகாணம் ஆன நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது பேரணியில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதில் முகமதுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அரசுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு தலீபான் பிடியில் உள்ள பகுதிகளில் தேர்தல் எப்படி நடத்தப்படும் என்பது கேள்வி குறியாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
