சுஷில்குமார் ஷிண்டே மகளுக்கு மந்திரி பதவி மறுப்பு : சோனியாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய காங்கிரஸ் நிர்வாகி

பிரனிதி ஷிண்டேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சோனியா காந்திக்கு ரத்தத்தில் கடிதம் எழுதினார்.
சுஷில்குமார் ஷிண்டே மகளுக்கு மந்திரி பதவி மறுப்பு : சோனியாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய காங்கிரஸ் நிர்வாகி
Published on

மும்பை,

காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்- மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டேயின் மகள் பிரனிதி ஷிண்டே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மத்திய சோலாப்பூர் நகர் தொகுதியில் இருந்து 3-வது முறையாக வெற்றி பெற்று இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தின்போது, வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்காததால் சோலாப்பூர் காங்கிரசார் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இது தொடர்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சோலாப்பூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நிதின் நாக்னே தனது ரத்தத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், சுஷில்குமார் ஷிண்டேவும், பிரனிதி ஷிண்டேவும் காங்கிரசுக்காக கடினமாக உழைத்தவர்கள். கட்சி தலைமைக்கு என்றும் விசுவாசமாக இருப்பவர்கள். ஆனால் அவர்களை காங்கிரஸ் ஓரங்கட்டி உள்ளது. சோலாப்பூரில் கட்சியை பலப்படுத்தவும், ஊக்குவிக்கவும் பிரனிதி ஷிண்டேவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். சுஷில்குமார் ஷிண்டேயை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பிரனிதி ஷிண்டேவுக்கு மந்திரி பதவி மறுக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பெண் கவுன்சிலர் பிர்தாஸ் பட்டேல் காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட்டுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கிடையே, மந்திரி சபையில் சங்ராம் தோப்டேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் புனேயில் உள்ள கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com