நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம்: கர்ப்பிணி கல்லால் அடித்து கொலை - போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை

பாகல்கோட்டை அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கர்ப்பிணியை கல்லால் அடித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. ஆனால் போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
Published on

பெங்களூரு,

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி டவுன் ரங்கநாத் நகரில் வசித்து வந்தவர் சந்தீப் பனபட்டி. இவரது மனைவி மஞ்சுளா(வயது 24). இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. மஞ்சுளா தற்போது கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சந்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மஞ்சுளாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை சந்தீப் அடித்து, உதைத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மஞ்சுளாவிடம், சந்தீப் தகராறு செய்தார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த சந்தீப், ஒரு கல்லை எடுத்து மஞ்சுளாவின் தலையில் பலமாக அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து மஞ்சுளா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தீப், மஞ்சுளாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த நிலையில் மஞ்சுளாவை அடித்து கொலை செய்த கல்லால் தனது தலையிலும், சந்தீப் பலமாக அடித்தார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாதாமி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளா, சந்தீப்பின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாதாமி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மஞ்சுளாவை கல்லால் அடித்து கொலை செய்த சந்தீப், போலீசுக்கு பயந்து தன்னே தானே கல்லால் அடித்து கொண்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பாதாமி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கொன்று விட்டு கணவரும் தற்கொலை செய்த சம்பவம் பாகல்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com