

சென்னை,
சட்டசபையின் இன்றைய கூட்டமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்கு ரூ. 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.