காரில் கடத்தி வந்த 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

ஆறுமுகநேரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
காரில் கடத்தி வந்த 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிக்கு புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் நேற்று ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை கண்டதும் காரில் இருந்து இறங்கி தப்பிச்சென்றார். காரில் பின்புறம் அமர்ந்திருந்த 3 பேரை பிடித்து சோதனையிட்டதில் மூடைகளில் 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் ஆறுமுகநேரியில் திசைகாவல் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் வெற்றிவேல் (வயது 44), முத்துகிருஷ்ணாபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வைகுண்டராஜ்(52), நடுத்தெருவைச் சேர்ந்த சித்திரவேல் மகன் சக்திவேல்(50) என்பது தெரியவந்தது.

அவர்கள் தூத்துக்குடியில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கிவந்து இந்தப் பகுதியில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார் புகையிலைப் பொருள்களுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஆறுமுகநேரி, பேயன்விளை கீழத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவிஜயனை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com