தமிழகத்தில் "10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் "10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

சென்னை, 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

வடகிழக்கு பருவமழையானது கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நன்றாக மழை பெய்து வருகின்றது. ஓவ்வொரு வருடமும் இந்த மழைக்காலங்களில்தான் நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக மலேரியா, டெங்கு, காலரா, சேற்றுப்புண் மற்றும் சளி நோய்கள் போன்ற பாதிப்புகள் இந்த மழைக்காலங்களில்தான் ஏற்படும். இந்த நோய்கள்  மழைக்காலத்தில் தவிர்க்க முடியாதவை.

ஏனெனில் மழைக்காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சாலைகள் மற்றும் வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும்  தண்ணீரில் கொசுக்கள் உருவாகின்றது. குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் உருவாகும். இதன் மூலமே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு என்பது பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டில் 10 மாதங்களில் மொத்தம் 5,600 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 492 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 நபர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 மாதங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வருடம் தோறும் டெங்கு பாதிப்பு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செல்லும், அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள், 66 பேர் இறந்தனர் மற்றும் 2017 ஆம் ஆண்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள், 65 பேர் இறந்தனர். எனவே இந்த ஆண்டு பாதிப்புகளை குறைக்க வேண்டும்.

அதன்படி, டெங்கு, மலேரியா, காலரா போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு வருகிற 29-ம் தேதி ஞாயிற்று கிழமை தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. காய்ச்சல், தலைவலி, சளி தொற்று உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் மருத்துவரை அணுகலாம். 10 வாரங்களில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதல் முறை ஆகும், இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com