

போனில் தொடர்பு கொண்டு...
உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமதுதன்வீர்(வயது 29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ப்ராஜெக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரியலூரில் உள்ள டால்மியா சிமெண்டு நிறுவனத்தில் சோலார் பேனல்கள் வேலை நிமிர்த்தமாக அரியலூரை அடுத்த ஜெ.ஜெ.நகரில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முகமது தன்வீரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், அவரிடம் பகுதிநேர வேலை வாங்கித்தருவதாக பேசியுள்ளார்.
மேலும் வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராமில் அவ்வப்போது ஒரு சில டாஸ்குகள் வரும் எனவும், அந்த டாஸ்குகளை நுழைவுக்கட்டணம் செலுத்தி சரியாக முடித்தால், செலுத்திய பணத்தை விட கூடுதலான பணம் அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார்.
ரூ.12 லட்சம் மோசடி
இதனை நம்பிய முகமதுதன்வீர் முன்பணம் கட்டி அந்த டாஸ்குகளை முடித்துள்ளார். அப்போது கூடுதலாக பணம் வந்ததால் அவற்றை உண்மையென நம்பினார். இதனால் அதிகப்படியான அளவில் 2 நாட்களில் ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் வரை கட்டியுள்ளார். ஆனால் இந்த முறை எந்த பணமும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமதுதன்வீர், இதுகுறித்து அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.