

சென்னை,
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்தனர். இந்த நிலையில், டேவிட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது. மேலும் அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.