19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி

சுனாமியால் கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை.
19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி
Published on

சென்னை,

நாம் வாழும் பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி 2 பங்கு கடல்தான். 7 கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை.

ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள்தான். அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004. 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.

என்னமோ... ஏதோ... என்று கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடியும், இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி வாரி சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர் பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. 19 ஆண்டுகளாக கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

'காலங்கள் கரைந்து போனாலும் கண்ணீர் இன்னும் கரையவில்லையே' என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரித்துச்சென்று பெருந்துயரம் தந்த சுனாமி எனும் இயற்கை பேரழிவின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள் அமைதி பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com