

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிராம் எடையுள்ள 861 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், 12 கிராம் எடையுள்ள 81 பாக்கெட் கூல் லிப் இருந்தது தெரியவந்தது.
இந்த பொருட்களை கடத்தி வந்தவர்கள் ஆறுமுகநேரி, பேயன்விளை, கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவிஜயன் (வயது 44), கணேசபுரத்தைச் சேர்ந்த வீரமணி மகன் நட்டார்(41) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4.5 கிலோ புகையிலை, கூல் லிப் பொருள்கள், லோடு ஆட்டோ, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சக்திவிஜயன், கடந்த மாதம் 5ம் தேதி 100 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தபோது, தப்பியோடிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மினி லோடு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்தியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.