2 குழந்தைகள் மீது பலர் உரிமை கோரும் விவகாரம்: மரபணு சோதனை நடத்தி முடிவு எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

இரு குழந்தைகள் மீது பலர் உரிமை கோருவதால், மரபணு சோதனை நடத்தி முடிவு எடுக்க குழந்தைகள் நல கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 குழந்தைகள் மீது பலர் உரிமை கோரும் விவகாரம்: மரபணு சோதனை நடத்தி முடிவு எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

ஆந்திர மாநிலம் சித்தூர்குப்பத்தை சேர்ந்தவர் பாலம்மா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீசார் என்னுடைய இரு மகள்களை கடந்த ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்தனர். அப்போது, அவர்களுடன் என் பேத்திகள் 2 பேர் இருந்தனர். அவர்களை பல்லடத்தில் உள்ள சினேகா சமூக சேவை மையத்தில் போலீசார் சேர்த்து விட்டனர்.

4 வயது ஆகும் பேத்திகளை என்னிடம் ஒப்படைக்க கோரி பல்லடம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தேன். இரு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுடன், சினேகா சமூக சேவை மையத்துக்கு சென்றபோது, குழந்தைகள், திருச்சியில் உள்ள குழந்தைகள் நல கமிட்டியினரிடம் உள்ளதாக கூறினர். அங்கு சென்று கேட்டபோது, குழந்தைகள் நல கமிட்டி தலைவர் குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். எனவே, 2 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, இந்த குழந்தைகளை கேட்டு வேறு சிலரும் மனு செய்துள்ளனர். எனவே, தீர விசாரித்து முடிவு செய்ய வேண்டி உள்ளது என்று குழந்தைகள் நல கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், சிறார் நீதி சட்டத்தின்படி, 2 குழந்தைகளும் மனுதாரரின் பேத்திகள் தானா? என்பதை மரபணு சோதனை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டியின் தலைவருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com