திருச்சி சமயபுரம் கோவிலின் தெப்ப குளத்தில் மிதந்த 2 ஆண் சடலங்கள்: பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி சமயபுரம் கோவிலின் தெப்ப குளத்தில் மிதந்த 2 ஆண் சடலங்கள்: பக்தர்கள் அதிர்ச்சி
Published on

திருச்சி,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இத்திருகோவில் தீராத நோய்களைத்தீர்க்கும் சிறந்த பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது. அமாவாசை நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச் சென்றால் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் காணப்படுவதால், இக்கோவிலில் அமாவாசை நாளன்று தங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இவர்களின் வசதிக்காக, கோவில் வளாகப் பகுதியில் அமாவாசை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. நாளை அமாவாசை வருவதையொட்டி கோவிலில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்தநிலையில், கோவிலின் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதப்பதை கண்டு பக்தர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மிதந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மிதந்த 2 ஆண் சடலங்கள் 30 வயது மற்றும் 50 வயது  என்பது தெரியவந்துள்ளது.

2 நாட்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எவ்வாறு இறந்தார்கள்? என சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலின் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com