குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ராசிபுரம் அருகே குளிக்க சென்ற 2 மாணவிகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

ராசிபுரம்

பள்ளி மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்திப்பழகானூரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் ஜனனி (வயது 15). இவள் ராசிபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகள் ரட்சனாஸ்ரீ (13). இவளும் ராசிபுரத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவிகள் ஜனனி மற்றும் ரட்சனாஸ்ரீ இருவரும் அதே பகுதியில் உள்ள நத்தமா குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். எதிர்பாராத விதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி இறந்த 2 மாணவிகளின் உடல்களை மீட்டனர்.

தகவல் அறிந்து ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் குட்டையில் மூழ்கி இறந்த மாணவிகளின் உடல்களை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் உடல் அருகே நாய்

இதனிடையே மாணவி ரட்சனாஸ்ரீ பாசத்துடன் வளர்த்த நாய் அவளின் உடல் அருகே சோகத்துடன் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த கிராம மக்கள் கண் கலங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com