எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 எம்.எல்.ஏ.க்கள்

தவெக அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ சுகுமார் பங்கேற்றார்.

எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடர்ந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.பாஸ்கர் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்து உள்ளனர்.

அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை

இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3-ம் தேதி முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 6 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் இன்று 4-வது நாளாக நடைபெற்றது. இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏவான எஸ்.எம்.சுகுமார் பங்கேற்கவில்லை. இந்த கூட்டம் முடிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போது அதிமுக எம்.எல்.ஏவுமான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொள்ளவில்லை. இன்றைய கூட்டத்தை 2 எம்.எம்.எல்.ஏக்களும் புறக்கணித்து உள்ளனர்.

2 எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு

அதே நேரத்தில் தவெக அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ சுகுமார் பங்கேற்றார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பிரியா, போலீஸ் சூப்பிரண்டு சிபின், எம்.எல்.ஏக்கள் தாஹிரா, கபில் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களோடு அதிமுக எம்.எல்.ஏ சுகுமாரும் கலந்து கொண்டார்.

தவெக அரசுக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி தேர்தல் தோல்விக்கு பிறகு சி.வி.சண்முகம் அணியில் இணைந்து செயல்பட்டதுடன் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவும் தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவரது திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் எடப்பாடி பழனிசாமியும் நடத்திய இன்றைய ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில் எம்.எல்.ஏக்களுடன் வீரமணி, சுகுமார் ஆகியோர் பங்கேற்கமால் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அதிமுகவில் இருந்து விலகி போகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இது அதிமுகவில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com