மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து:பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலி

கெங்கவல்லி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து:பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து:பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலி
Published on

கெங்கவல்லி 

கெங்கவல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில், பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மாணவர்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு பகுதியில் வசிப்பவர் ஜெயராமன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 15). இவர் கெங்கவல்லி அரசு பள்ளியில், 10-ம் வகுப்பு முடித்து விட்டு 11-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை இவருடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் கெங்கவல்லி பகுதியில் உள்ள மருந்து கடைக்கு மாத்திரை வாங்க ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மாத்திரை வாங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பள்ளக்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில், ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் திரும்பியது. அப்போது அந்த வழியாக பின்னால் வந்த நெல் அறுவடை எந்திர ஆபரேட்டரான 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அரவிந்த் (23) என்பவரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் பாலீசார் உடனடியாக தடுப்புகளை அமைத்தனர். பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com